விக்ரம் நடித்து வரும் 'சீயான் 60' படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சீயான் 60' பணிகளை முடித்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இறுதிக்கட்டப் பணிகளையும் துரிதப்படுத்தி விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
தற்போது லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விக்ரம். இதன் படப்பிடிப்பு நாளை (ஆகஸ்ட் 16) முதல் கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது.