ஓடிடியில் ‘கசட தபற’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஓடிடியில் 'கசட தபற' வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கட் பிரபு மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் 'கசட தபற'. ஒரே கதையில் 6 பகுதிகள் கொண்டதாக உருவாக்கி இயக்கியுள்ளார் சிம்புதேவன். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரிஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் ஆகியோரிடம் பணிபுரிந்தார் சிம்புதேவன். ஒரே கதையில் பல்வேறு புதுமைகளைச் செய்துள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இதனால், ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். அதில் இந்தப் படத்தின் உரிமையை சோனி லைவ் நிறுவனம் கைப்பற்றியது.

தற்போது ஆகஸ்ட் 27-ம் தேதி 'கசட தபற' திரைப்படம் சோனி லைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இன்னும் ஓரிரு தினங்களில் 'கசட தபற' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கவுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE