'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக் தொடக்கம்: படக்குழுவினர் விவரம்

By செய்திப்பிரிவு

சென்னையில் 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரம் தெரியவந்துள்ளது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த படம் 'ஒத்த செருப்பு'. 2019-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பார்த்திபனை வெகுவாகப் பாராட்டினார்கள்.

மேலும், இந்தப் படத்துக்காகப் பல்வேறு விருதுகளையும் வென்றார் பார்த்திபன். இந்தப் படத்தை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதில் இந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன் நடிப்பது உறுதியானது. இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விஷயங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இதனிடையே, இன்று (ஆகஸ்ட் 12) முதல் சென்னையில் 'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கும் இப்படத்தில் அபிஷேக் பச்சன் நடித்து வருகிறார். தமிழில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி, எடிட்டர் சுதர்சன் ஆகியோர் இந்தியிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இசையமைப்பாளர் யார் என்பது மட்டும் முடிவாகவில்லை.

'ஒத்த செருப்பு' படத்தின் இந்தி ரீமேக்கை அமிதாப் பச்சன் தயாரித்து வருகிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக மாறியுள்ளார் அமிதாப் பச்சன்.

'ஒத்த செருப்பு' படத்தின் ஹாலிவுட் ரீமேக்கிற்காக 'ட்ரூ லைஸ்' படத்தின் தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE