சல்மான் கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மீராபாய் சானு: கனவு நனவானதாக நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானு, நடிகர் சல்மான் கானைச் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை மகளிருக்கான பளு தூக்குதலில் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்திருந்தார் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மீராபாய் சானு. பதக்கம் வென்ற அவருக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சில தினங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து மீராபாய் வாழ்த்துகளைப் பெற்றார். அதைத் தனது ட்விட்டரிலும் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நேற்று (12.08.21) பாலிவுட் நடிகர் சல்மான் கானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் மீராபாய் சானு. இதை சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில், ''உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன் மீராபாய். உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்து உண்டு'' என்று குறிப்பிட்டுள்ளார்.

சல்மான் கானின் இந்தப் பதிவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மீராபாய் சானு, ''மிக்க நன்றி சார். நான் உங்களின் மிகப்பெரிய ரசிகை. என் கனவு நனவானது போல இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE