சினிமாவில் நுழைந்து 43 ஆண்டுகள்: ராதிகா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சினிமா துறையில் 43 ஆண்டுகள் நிறைவு செய்ததைத் தொடர்ந்து நடிகை ராதிகா நெகிழ்ச்சியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இப்படத்தில்தான் முதன்முதலில் நடிகை ராதிகா நாயகியாக அறிமுகமானார். கடந்த செவ்வாய்க்கிழமையோடு (ஆக.10) ராதிகா சினிமா துறையில் நுழைந்து 43 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 43 ஆண்டுகாலப் பயணம் குறித்து நடிகை ராதிகா நெகிழ்ச்சியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

''43 ஆண்டுகள் என்பதை நம்பமுடியவில்லை. இன்று காலை என் இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினேன். பல நினைவுகளை நாங்கள் பகிர்ந்துகொண்டோம். இந்த 43 வருடப் பயணம் குறித்து நிறைய பேசினோம். அவருடைய ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது. இன்னும் பல ஆண்டுகள் நீ நன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்த்தினார். அதுவே எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம்.

‘என்னுடைய தொழில் உன்னோடு இருக்கட்டும்’ என்று என் தந்தை என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன. என்னோடு பணியாற்றிய ஒவ்வொரு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக இன்றும் என்னைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் என் ரசிகர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்''.

இவ்வாறு அந்த வீடியோவில் ராதிகா பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE