'சூரியன்' தயாரிப்பாளருடன் சந்திப்பு: சரத்குமார் நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

'சூரியன்' தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுடனான சந்திப்பு குறித்து சரத்குமார் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார், ரோஜா, கவுண்டமணி, மனோரமா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரியன்'. 1992-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கே.டி.குஞ்சுமோன் தயாரித்திருந்தார். நாயகனாக அறிமுகமான சரத்குமாருக்கு முதன்முதலாக மாபெரும் வெற்றியைக் கொடுத்த படம் 'சூரியன்' என்பது நினைவுகூரத்தக்கது.

'சூரியன்' படத்துக்குப் பிறகே, பல்வேறு படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நாயகனாக வலம் வரத் தொடங்கினார் சரத்குமார். தற்போது 'சூரியன்' தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை விமான நிலையத்தில் எதேச்சையாகச் சந்தித்துப் பேசினார் சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த, மிகப்பெரிய வெற்றிப் படமான 'சூரியன்' திரைப்படத்தைத் தயாரித்த கே.டி.குஞ்சுமோனை விமான நிலையத்தில் சந்திக்க நேரிட்டது. வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி இருவரும் பேசிக்கொண்ட போது, வாழ்க்கையில் கடந்துவந்த பாதையின் நிகழ்வுகளை மறக்காமல் நினைவில் கொண்டிருப்பவர்கள் சிறப்பாக வாழ்வார்கள் என்று என்னை ஆசிர்வதித்தது நெகிழச் செய்தது".

இவ்வாறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE