பிரகாஷ்ராஜுக்கு விபத்து ஏற்பட்டதால் கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். சமீபத்தில் சென்னையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
நேற்று (ஆகஸ்ட் 9) கோவளத்தில் உள்ள வீட்டில் சறுக்கி, கீழே விழுந்துவிட்டார் பிரகாஷ்ராஜ். அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.
தற்போது ஹைதராபாத்தில் முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகச் சென்றுள்ளார் பிரகாஷ்ராஜ். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது:
"ஒரு சிறிய விபத்து.. லேசான எலும்பு முறிவுதான்.. இருந்தாலும் எனது பாதுகாப்பு கருதி ஹைதராபாத்தில் உள்ள நண்பர் டாக்டர் குருவாரெட்டியிடம் செல்கிறேன். எல்லாம் சரியாகிவிடும். கவலை வேண்டாம். அன்புடன் என்னை நினைவில் கொள்ளுங்கள்."
இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.