'நாயட்டு' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அஞ்சலி நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாயட்டு'. ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இணைந்து தயாரித்த இந்தப் படம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது. காவல் துறைக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், இதர மொழிகளின் ரீமேக் உரிமை விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கின் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
குஞ்சக்கோ போபன் கதாபாத்திரத்தில் சத்ய தேவ், ஜோஜு ஜார்ஜ் கதாபாத்திரத்தில் ராவ் ரமேஷ், நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் அஞ்சலி ஆகியோரை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.
'நாயட்டு' படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார். தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவுள்ளார்.