‘நாங்க வேற மாறி’ பாடல் உருவானது எப்படி? - யுவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

'வலிமை' படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாறி’ பாடல் உருவானது குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப்படத்தில் இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்களுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி படத்தின் முதல் பாடலான ‘நாங்க வேற மாறி’ பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். விக்னேஷ் எழுதிய இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அனுராக் குல்கர்னி பாடியுள்ளனர்.

இந்நிலையில் இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறும்போது, ‘படத்தில் அஜீத்துக்காக ஒரு மாஸ் பாடல் வேண்டும் என்று இயக்குநர் ஹெச்.வினோத் கேட்டிருந்தார். பாடல் உருவாக்கத்தில் அஜீத் மற்றும் அவரது ரசிகர்களுக்கு என்ன தேவை என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டோம். ரசிகர்களுக்கு திரையரங்கில் இது கொண்டாட்டமான பாடலாக இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டோம்’ என்றார்.

இதுவரை இப்பாடல் யூடியூப் தளத்தில் 1.3 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE