நடனக் கலைஞர் மேதில் தேவிகாவின் கணவர் என்று தன்னைப் பற்றித் தவறாகச் செய்தி வெளியிட்ட ஊடகங்களை மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ராஜீவ் கோவிந்தன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் பிரபல நடிகர் முகேஷ். இவர் சில வருடங்களுக்கு முன்பு, குச்சிபுடி மற்றும் மோகினியாட்டத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் நடனக் கலைஞர் மேதில் தேவிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். தேவிகாவுக்கும் இது இரண்டாவது திருமணமே.
தனது கணவருடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையென்றாலும் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை, அவருடைய பொது வாழ்க்கைக்கே அவருக்கு நேரம் போதுமானதாக இருக்கிறது என்று காரணங்கள் கூறி தற்போது முகேஷை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார் தேவிகா.
இந்நிலையில் இதுகுறித்துச் செய்தி வெளியிட்டிருக்கும் சில யூடியூப் சேனல்கள், தேவிகாவின் முதல் கணவர் ராஜீவ் நாயர் பற்றிக் குறிப்பிடும்போது, மலையாளத் தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான ராஜீவ் கோவிந்தனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, அவர் தான் தேவிகாவின் முதல் கணவர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் அவர் எழுதியிருக்கும் சில கவிதைகளும் தேவிகாவைப் பற்றியதுதான் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளனர்.
ராஜீவ் கோவிந்தனுக்கு ராஜீவ் நாயர் என்கிற இன்னொரு பெயரும் உள்ளது என்பதே இந்தக் குழப்பத்துக்கு முதல் காரணம். மேலும் சரியான நபர் யாரென்று சரிபார்க்காமல் வெளியிடப்பட்டிருக்கும் இந்தச் செய்திகளைக் கடுமையாகச் சாடி, ராஜீவ் கோவிந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார்.
"நான் மேதில் தேவிகாவின் முன்னாள் கணவர் கிடையாது. ஏன், எனக்கு அவரைத் தெரியவே தெரியாது. உண்மை என்னவென்று தெரியாமல் எனது பெயர், எனது கவிதைகள் எல்லாம் இதில் தேவையில்லாமல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவரவர் கற்பனைகளுக்கு ஏற்றவாறு கதைகளை உருவாக்கி வருகிறார்கள். என்ன வகையான பத்திரிகை தர்மம் இது? என்னைப் பற்றிப் பொய்யான செய்திகளை வெளியிட்டிருப்பவர்களுக்கு எதிராகச் சட்டரீதியான நடவடிக்கைகளை நான் தொடங்கியிருக்கிறேன்" என்று ராஜீவ் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது செய்தி வெளியிட்ட சில சேனல்கள் பொய்யான தகவல்களை நீக்கியிருப்பதாகவும், தனக்கு ஆதரவு தந்தவர்களுக்கு நன்றி என்றும் ராஜீவ் கோவிந்தன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.