தனுஷ் - மித்ரன் ஜவஹர் இணையும் திருச்சிற்றம்பலம்

By செய்திப்பிரிவு

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்துக்கு 'திருச்சிற்றம்பலம்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாறன்' படத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் தனுஷ். உடனடியாக தனது அடுத்த படத்தினை இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கியுள்ளார். இதனை மித்ரன் ஜவஹர் இயக்கி வருகிறார்.

இன்று சென்னையில் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் தலைப்பை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கு 'திருச்சிற்றம்பலம்' என்று தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் தனுஷ் - அனிருத் மீண்டும் இணைந்து பணிபுரியவிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் தனுஷ். செப்டம்பர் மாதத்தில் 'மாறன்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE