பிரபல பாடகர் யோயோ ஹனி சிங் மீது அவரது மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல பாடகராக இருப்பவர் யோயோ ஹனி சிங். ஹிர்தேஷ் சிங் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் ஏராளமான சுயாதீனப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் பாடி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத் இசையில் ‘எதிர்நீச்சல்’ படத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்நிலையில் இவரது மனைவி ஷாலினி தல்வார், யோயோ ஹனி சிங் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
ஷாலினி தல்வார் தனது மனுவில் யோயோ ஹனி சிங் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குடி மற்றும் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஒருமுறை தன்னை உணவு, குடிநீர் இன்றி 18 மணி நேரம் ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதைத் தான் பலமுறை தட்டிக் கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஷாலினி தெரிவித்துள்ளார்.
ஷாலினியின் மனுவை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பதிலளிக்குமாறு யோயோ ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.