ராம் இயக்கத்தில் நிவின் பாலி - அஞ்சலி - சூரி

By செய்திப்பிரிவு

ராம் இயக்கவுள்ள புதிய படத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்தப் படத்தை ராம் இயக்கவுள்ளார். 'பேரன்பு' படத்துக்குப் பிறகு ராம் இயக்கவுள்ள படம் இதுவாகும். இதில் நிவின் பாலி நாயகனாக நடிக்கவுள்ளார். மேலும் அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. ராம் இயக்கத்தில் வெளியான முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படத்துக்கும் அவருடைய நெருங்கிய நண்பர் யுவன் இசையமைக்கவுள்ளார்.

ராமின் இந்தப் படத்தின் படப்பிடிப்பை சென்னையிலேயே முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE