‘அச்சமுண்டு அச்சமுண்டு’ இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘நிபுணன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரசன்னா - சினேகா நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான படம் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’. ரெட் ஒன் கேமராவில் படமாக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும். இப்படத்தை அருண் வைத்தியநாதன் இயக்கியிருந்தார். கார்த்திக் ராஜா இசையமைத்தார். பிறகு 'நிபுணன்' படத்தை இயக்கினார். அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார் நடித்த இப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. மலையாளத்தில் மோகன்லாலை வைத்து ‘பெருச்சாழி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ‘அன்புக்கோர் பஞ்சமில்லை’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகளைச் சுற்றி நடக்கும் கதையாக உருவாகவுள்ள இப்படத்தை அருண் வைத்தியநாதனின் சொந்த நிறுவனமான யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது.

விரைவில் இப்படத்தில் பணிபுரியவிருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகையர் பற்றிய தகவல் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE