உயிரோடு இருப்பதே குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது - யாஷிகா உருக்கம்

By செய்திப்பிரிவு

உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது என்று நடிகை யாஷிகா பதிவிட்டுள்ளார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

கடந்த ஜூலை 24 அன்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (02.08.21) யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இப்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை. உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது. ஒரு மோசமான விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா இல்லை என்னுடைய உயிர்த்தோழியை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பவணி.

நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்று எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடு. ஒரு மோசமான நிலையை உன் குடும்பத்தினருக்கு ஏற்படுத்தி விட்டேன். உன்னுடைய ஆத்மா அமைதி அடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள் உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன். நம்முடைய நினைவுகளை நான் என்றென்றும் பாதுகாப்பேன். நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவருடைய குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

இவ்வாறு யாஷிகா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE