இன்னும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை என்று துஷாரா தெரிவித்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியான இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா நடித்திருந்தார். அவருடைய நடிப்பைப் பலரும் பாராட்டினார்கள். மேலும், பல்வேறு இயக்குநர்களும் அவரைத் தங்களுடைய படத்தில் நடிக்க அவரை அணுகி வருகிறார்கள்.
இந்நிலையில், 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்பு தொடர்பாக துஷாரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ரசிகர்களிடையே இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரும் வரவேற்பு மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு, நான் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், இதுபோன்ற ஒரு சிறந்த கதாபாத்திரத்திற்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். அது 'சார்பட்டா' படத்தில் நடந்துள்ளது.
பா.இரஞ்சித் சார் ஆபீஸில் இருந்து எனக்கு போன் வந்தபோது, முதலில் யாரோ என்னை பிராங்க் செய்கிறார்கள் என்று நினைத்து நிராகரித்துவிட்டேன். அதன்பின் அந்த எண்ணிலிருந்து 17 மிஸ்டு கால் வந்தது. நான் விசாரிக்கையில்தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன் என்று தெரிந்தது. உடனடியாக இரஞ்சித் சார் ஆபீஸ் சென்று அவரிடம் மன்னிப்பு கேட்டேன்.
ஆனால், இரஞ்சித் சார் மிகவும் பணிவாக அதை ஏற்றுக்கொண்டு, கதையில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி விவரித்தார். என்னை ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னார். அவருக்கு இந்தப் பாத்திரத்தை நான் சரியாகச் செய்து விடுவேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், போட்டோஷூட் நடத்திய பிறகு, இந்தக் கதாபாத்திரத்தில் நான் அழகாகப் பொருந்தியிருப்பதாக நம்பினார்.
இந்தப் படம் முடிந்து வெளியான பின்னரும், இன்னும் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து என்னால் மீள முடியவில்லை. இவ்வளவு வருடங்களாகக் காத்திருந்த வெற்றி, இந்த 'சார்பட்டா' படத்தில் எனக்கு அமைந்தது. ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
நான் அவரைப் பற்றி வெளியில் கேள்விப்பட்டதற்கு முற்றிலும் மாறாக இருந்தார். அவர் மிகவும் கலகலப்பாக இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருடனும் சேர்ந்து பேசி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் என்று கேள்விப்பட்டேன். ஆனால், இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனெனில் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடம் இருந்து விலகியே இருக்கும். அதற்காகத்தான் அப்படி இருந்தார் என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
இயக்குநர் பா.இரஞ்சித் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால், அவருடைய கபிலன் கதாபாத்திரத்தை விட்டுச் சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னைப் பார்த்துக் கொண்டார். அவரின் உழைப்பு பிரமிப்பானது. அனைவரும் மாரியம்மாளைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது".
இவ்வாறு துஷாரா தெரிவித்துள்ளார்.
'சார்பட்டா பரம்பரை' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடித்து வரும் படத்தில் துஷாரா நடித்து வருகிறார்.