ராஜ் குந்த்ராவின் வழக்கு சட்டவிரோதமானது அல்ல என்பதற்கான காரணங்களை அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறியுள்ளார்
வெப் சீரிஸ் என்கிற போர்வையில் பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்கள் எடுத்ததாகவும், இதற்காகத் தனியாக செல்போன் செயலி தயாரித்துப் பதிவேற்றம் செய்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ராவை மும்பை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளனர்.
ஆனால் ராஜ் குந்த்ரா எடுத்திருக்கும் படங்கள் பாலுணர்வைத் தூண்டும் ஆபாசப் படங்கள் அல்ல, அவை பாலுணர்வைச் சொல்லும் கலையம்சம் கொண்டவை என்றும், எனவே ஆபாசப் படம் எடுத்திருப்பதாக அவரைக் கைது செய்திருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரது வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.
ஆனால் இதற்கு பதிலளித்திருக்கும் அரசு தரபு வழக்கறிஞர் அருணா பாய், வாட்ஸப் குழுமங்களை, உரையாடல்களை நீக்கியதெல்லாம் ஆதாரங்கலை அழித்த குற்றங்களாகும், எனவே அவரது கைது சரியே என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். மேலும் ராஜ் குந்த்ராவின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் ரயான் தார்பேவும், ஆதாரங்களை அழித்த காரணத்துக்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஹாட்ஷாட்ஸ் மற்றும் பாலி ஃபேம் ஆகிய ராஜ் குந்த்ராவுக்குச் சொந்தமான செயலிகளிலிருந்து 51 ஆபாசப் படங்களை மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். ராஜ் குந்த்ராவுக்கும், லண்டனில் இருக்கும் அவரது மைத்துனர் பிரதீப் பாக்ஷிக்கும் இடையே நடந்த மின்னஞ்சல் உரையாடலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அருணா பாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஏற்கெனவே ஆபாசப் படம் எடுத்து தனது இணையதளத்தில் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டிருந்த நடிகை கெஹனா வைஸித்தும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார். தற்போது ஜாமீன் பெற்றிருக்கும் அவர், தன்னை இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க மும்பை காவல்துறையினர் தன்னிடம் ரூ. 15 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.