விமானக் கோளாறால் நடுவானில் தத்தளித்த 'சீயான் 60' படக்குழு

நடுவானில் தத்தளித்த 'சீயான் 60' படக்குழு, சென்னைக்குத் திரும்பி மீண்டும் டார்ஜிலிங் சென்றது.

'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சீயான் 60' பணிகளை முடித்து வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக மும்முரமாகப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை டார்ஜிலிங்கில் நடத்த முடிவு செய்தது படக்குழு.

இதற்காக கார்த்திக் சுப்புராஜ் இரண்டு தினங்களுக்கு முன்னதாக டார்ஜிலிங் சென்றுவிட்டார். துருவ் விக்ரம் உள்ளிட்ட இதர படக்குழுவினர் கொண்ட சுமார் 60-க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூலை 30) விமானத்தில் டார்ஜிலிங் கிளம்பினார்கள். நடுவானில் விமானத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது.

இதனை விமானி அறிவித்தவுடன் படக்குழுவினர், பயணிகள் அனைவரும் பதற்றமடைந்தனர். உடனடியாக மீண்டும் சென்னையிலேயே பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் நிம்மதியடைந்தனர்.

இறுதியில், இன்று (ஜூலை 31) அதிகாலையில் 'சீயான் 60' படக்குழுவினர் மீண்டும் விமானத்தில் டார்ஜிலிங் சென்றடைந்தனர். தற்போது 'சீயான் 60' படப்பிடிப்பு அங்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE