'துணிந்த பின்' முற்றிலும் வித்தியாசமான அனுபவம்: அதர்வா பகிர்வு

By செய்திப்பிரிவு

'துணிந்த பின்' முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

இதில் ‘துணிந்த பின்’ என்ற படத்தை இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து அதர்வா கூறியிருப்பதாவது:

''இயக்குநர் சர்ஜுன் இந்தப் படத்தின் திரைக்கதையைப் பற்றி விவரிக்கும்போது, எந்த உணர்வைப் பற்றிய கதையைச் சொல்லப்போகிறார், என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்குச் சென்றது.

ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன் என்று கூறியபோது ஆடம்பரக் காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்துகொண்டேன். இந்தப் படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சர்ஜுன் உடன் பணிபுரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தைச் செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது".

இவ்வாறு அதர்வா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE