அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அறிமுக இயக்குநராக அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் திரைப்படம் 'தேஜாவு'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத் குமார், ஸ்மிருதி வெங்கட், ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி மற்றும் காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் நவீன் சந்திரா கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் நேற்று (ஜூலை 29) இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் அருள்நிதி சம்பந்தப்பட்ட காட்சிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி விரைவில் வெளியீட்டிற்குக் கொண்டுவர படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணியாற்றும் இப்படத்திற்கு, பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுதவிர இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE