'ராதே ஷ்யாம்' புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கி நேற்றுடன் (ஜூலை 29) நிறைவடைந்தது. தொடர்ச்சியாக இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

முதலில் இந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி (இன்று) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தலால் படத்தை குறிப்பிட்ட தேதியில் முடிக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர். இதற்காக ஒரு பிரத்யேக போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE