ராம்சரண் - ஷங்கர் படம்: அடுத்த கோடைக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டம்

By செய்திப்பிரிவு

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு கோடைக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியிருக்கிறார். இதில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் ராம்சரண். இதன் நாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், இந்தப் படத்துக்காக இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு இருவருமே பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். முக்கியமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை அடுத்த ஆண்டு கோடைக்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு திட்டமிடப்படவில்லை.

அனைத்துக் காட்சிகளையும் அரங்குகளுக்குள்ளேயே முடிக்க முடிவு செய்துள்ளனர். 3 கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு முடிக்கப்படவுள்ளது. இதற்கு ஏற்றவாறு நடிகர்களிடம் தேதிகள் வாங்கப்பட்டு வருகின்றன. ஷங்கர் இயக்கத்தில் உருவான படங்களுள் குறுகிய காலத் தயாரிப்பாக இந்தப் படம் அமையும் எனத் தெரிகிறது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'ஆர்சி15' என அழைத்து வருகிறது படக்குழு. படத்தின் பூஜையன்று ராம்சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE