'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு நிறைவு: 2022-ல் வெளியீடு?

By செய்திப்பிரிவு

'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 2022-ம் ஆண்டு வெளியிடப் படக்குழு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராதா கிருஷ்ணா இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. 'சாஹோ' படத்தைத் தயாரித்த யு.வி.கிரியேஷன்ஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் 'ராதே ஷ்யாம்' வெளியாகவுள்ளது.

பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. அத்துடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்றுடன் (ஜூலை 29) 'ராதே ஷ்யாம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. தொடர்ச்சியாக இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

முதலில் ஜூலை 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. புதிய வெளியீட்டுத் தேதியை முடிவு செய்யாமல் படக்குழு படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது. தற்போது 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE