'சிப்பாய்' படத்தைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
சரவணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'சிப்பாய்'. சிம்பு நடிப்பில் வெளியான 'சிலம்பாட்டம்' படத்துக்குப் பிறகு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினார் சரவணன்.
இதன் படப்பிடிப்பு நிறைவுபெறும் தறுவாயில், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பண நெருக்கடியால் நிறுத்தப்பட்டது. சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்தது. தற்போது இந்தப் படத்தின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசி முடித்து வாங்கியுள்ளார் ஆர்.எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல்.
கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால், விரைவில் 2 பாடல்கள் மற்றும் இதர காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. விரைவில் அனைத்துப் பணிகளையும் முடித்து வெளியாகும் எனக் கூறப்படுகிறது.