உங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றேன் ஆர்யா என்று ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் பிரசன்னா.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.
பல்வேறு திரையுலக பிரபலங்களும் 'சார்பட்டா பரம்பரை' படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்குத் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். படக்குழுவினரைப் பாராட்டும் வகையில் பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'சார்பட்டா பரம்பரை' திரைப்படமும் அதன் கதாபாத்திரங்களும் இன்னும் நீண்ட காலத்துக்கு நமது மனதில் இருக்கும். இயக்குநர் பா.இரஞ்சித் எழுதியதில், இயக்கத்தில் இதுவரை வந்ததில் சிறந்த படைப்பு. சகோதரர் ஆர்யாவின் நடிப்பில் மிகச்சிறந்த படம். உரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது.
» பா.இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் - துஷாரா?
» நமது நாட்டின் முதுகெலும்பே சிறு வியாபாரிகள்தான்: சோனு சூட்
எனது தம்பி கலையரசனை நினைத்துப் பெருமையடைகிறேன். மற்றவர்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு பசுபதி மற்றும் ஜி.என்.சுந்தரின் நடிப்பு இருந்தது. டான்சிங் ரோஸ் போன்ற அற்புதமான நண்பர்கள், பெண் கதாபாத்திரங்கள் என அத்தனையுமே திரையில் அட்டகாசமாக இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக டாடி கதாபாத்திரத்தில் ஜான் விஜய் நடிப்பு இருந்தது. இந்தப் படம் தொடர்பான அத்தனை விஷயங்களும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. அந்தக் காலகட்டத்தை உருவாக்கிய கலை இயக்குநர் ராமலிங்கம் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளிக்குப் பாராட்டுகள். எனக்குப் படத்தில் என்னவெல்லாம் பிடித்தது என்பது குறித்து நான் எழுதிக்கொண்டே போவேன்.
சந்தோஷ் நாராயணின் இசை எப்போதும் போல சிறப்பு. இந்தப் படத்தின் ஒவ்வொரு இடத்தையும் ரசித்தேன். திரையரங்கில் வெளியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று நினைத்தேன். 'சார்பாட்டா பரம்பரை' படத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் வாழ்த்துகள்".
இவ்வாறு பிரசன்னா தெரிவித்துள்ளார்.
அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆர்யா, "பிரதர்... உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. உங்கள் பாராட்டு மிக முக்கியமானது பிரதர்" என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரசன்னா, "நான் என்றுமே உங்களிடமிருந்து, உங்கள் கடின உழைப்பிலிருந்துதான் உந்துதல் பெற்றிருக்கிறேன். இது, உடலுழைப்பைத் தாண்டிய முயற்சி.
நீங்கள் தோற்றதும் உங்கள் அம்மா, மனைவி முன் அழும் காட்சி, அப்படியான உடற்கட்டோடு அழும்போது நீங்கள் இன்னும் குழந்தைதான் என்று என்னை உணரவைத்தீர்கள். அற்புதம். உங்கள் வீட்டுக் குட்டி ராணிக்கும் என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.