பா.இரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் - துஷாரா?

By செய்திப்பிரிவு

பா.இரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படத்தில் காளிதாஸ் மற்றும் துஷாரா இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் நடித்த அனைவருமே பா.இரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

'சார்பட்டா பரம்பரை' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில் தனது அடுத்த படத்தை உறுதிப்படுத்தினார் பா.இரஞ்சித். முழுக்க காதலை மையப்படுத்திய இந்தப் படத்துக்கு 'நட்சத்திரம் நகர்கிறது' எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அந்தப் பேட்டியில் பா.இரஞ்சித் கூறவில்லை.

தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் நாயகனாக காளிதாஸ் ஜெயராம், நாயகியாக துஷாரா ஆகியோர் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவுக்கு மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றவர் துஷாரா என்பது குறிப்பிடத்தக்கது.

காளிதாஸ் ஜெயராம், துஷாரா ஆகியோருடன் நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்புக்குச் செல்லவும் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE