'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ஒரு பாடலில் பல்வேறு பிரம்மாண்டங்களை ஒருங்கிணைத்துள்ளார் ராஜமெளலி.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனால் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார் கீரவாணி.
'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நட்பைப் பற்றிப் பாடலொன்று இடம்பெறுகிறது. இதனை ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடவுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் அனைத்து மொழிகளின் இசை உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் லகரி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தெலுங்கில் பாடல் வரிகளை ஸ்ரீவெண்ணிலா சீதாராம சாஸ்திரி, தமிழில் மதன் கார்க்கி, இந்தியில் ரியா முகர்ஜி, கன்னடத்தில் ஆசாத் வரதராஜ், மலையாளத்தில் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் ஆகியோர் எழுதியுள்ளனர்.
» 'கொரோனா குமார்' அப்டேட்: நாயகனாக சிலம்பரசன் ஒப்பந்தம்
» வெப் தொடர்களைக் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை: நடிகர் சுனில் பால் வேதனை
இந்தப் பாடலைப் பெரும் பொருட்செலவில் அரங்குகள் அமைத்து சமீபத்தில் காட்சிப்படுத்தியுள்ளார் ராஜமெளலி. அரங்குகள் மட்டுமே சுமார் 6.5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் படக்குழுவினர் அனைவருமே இடம்பெறுவது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பிரம்மாண்டத்தையும் இந்தப் படத்தில் ராஜமௌலி இணைத்துள்ளார்.
என்னவென்றால், 'ஆர்.ஆர்.ஆர்' நடிகர்களுடன் 'பாகுபலி' நாயகன் பிரபாஸ், வில்லன் ராணா ஆகியோருடம் இடம்பெற்றுள்ளனர். 'பாகுபலி' அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் என்பதால், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் நட்புப் பாடலை வைத்து அனைத்து மொழிகளிலும் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதேபோன்று நடிகர்களை ஒன்றிணைத்து பிரம்மாண்டமாகப் படமாக்க ராஜமெளலியால் மட்டுமே முடியும் என்று தெலுங்குத் திரையுலகினர் பேசி வருகிறார்கள்.