'கொரோனா குமார்' அப்டேட்: நாயகனாக சிலம்பரசன் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'கொரோனா குமார்' படத்தில் நாயகனாக நடிக்க சிலம்பரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கோகுல் இயக்கத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா'. இதில் விஜய் சேதுபதி, நந்திதா, பசுபதி, சூரி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள், காட்சிகள் எல்லாம் இப்போதும் மீம்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்திலிருந்த கதாபாத்திரங்களுள் ஒன்றை மட்டும் எடுத்துத் தனியாகப் படமாக்கவுள்ளார் கோகுல். இதற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் அனைத்துமே முடிந்து, நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் நாயகனாக நடிக்கப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தற்போது, இதில் நாயகனாக நடிக்க சிலம்பரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, உடனே சம்மதம் தெரிவித்துள்ளார். முதலில் இந்தப் படத்தை சினிமாவாலா பிக்சர்ஸ் சதீஷ் மட்டுமே தயாரிப்பதாக இருந்தது. அவருடன் இப்போது வேல்ஸ் நிறுவனமும் இணைந்துள்ளது.

விரைவில் இந்தப் படத்தின் இதர நடிகர்கள் ஒப்பந்தம் முடிந்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE