அனிருத்தை பாராட்டிய 'ஆர்.ஆர்.ஆர்' இசையமைப்பாளர்

By செய்திப்பிரிவு

அனிருத்தை தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார் இசையமைப்பாளர் கீரவாணி.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இதனால் அனைத்து மொழிகளிலும் பாடல்கள் உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் கீரவாணி.

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நட்பைப் பற்றி விளம்பரப் பாடல் ஒன்றைத் திட்டமிட்டு படமாக்கியுள்ளார் ராஜமெளலி. இதனை தமிழில் யாரைப் பாடவைத்தால் சரியாக இருக்கும் என்று ஆலோசித்துள்ளது படக்குழு. இறுதியாக அனிருத்தை பாட வைத்து ஒலிப்பதிவு செய்துள்ளார்கள்.

இதற்காக சென்னை வந்த கீரவாணி தனது ட்விட்டர் பதிவில் "'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்துக்காக அனிருத் உடன் ஒரு சிறப்பான அமர்வு. திறமை, ஆற்றல், செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான குழு ஆகியவை அவரது சொத்து. அனைத்துக்கும் மேல் மிகுந்த பணிவு" என்று தெரிவித்தார். அவருக்குப் பதிலளிக்கும் விதமாக அனிருத், "அது என் கடமை சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என் அன்பு" என்று தெரிவித்துள்ளார்.

அனிருத்தின் ட்வீட்டைக் குறிப்பிட்டு 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ட்விட்டர் பக்கத்திலிருந்து, "'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் உங்களின் பங்களிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. உலகம் அதை வெகு விரைவில் வியந்து ரசிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE