'லிஃப்ட்' வெளியீடு குறித்து வதந்தி: லிப்ரா நிறுவனம் விளக்கம்

'லிஃப்ட்' வெளியீடு குறித்த வதந்திகளுக்கு லிப்ரா நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் இன்னும் வெளியிட முடியாமல் உள்ளது. தமிழகத்தில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

தற்போது 'லிஃப்ட்' வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"நாங்கள் இதன் மூலம் அதிகாரபூர்வமாக உறுதி செய்கிறோம். 'லிஃப்ட்' திரைப்படம் 100% பார்வையாளர்களுடன் திரையரங்கில் வெளியாகும். தயவுசெய்து படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்ற வதந்தியை நம்பவேண்டாம். படத்துக்குத் தேவையான ஒலிக் கோர்வை பணிகளில் சவுண்ட் இன்ஜினியர் தபஸ் நாயக் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது திரையரங்கில் பார்க்கவேண்டிய ஒரு படம்"

இவ்வாறு லிப்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

'லிஃப்ட்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக மைக்கேல் பிரிட்டோ, சண்டைக்காட்சிகள் இயக்குநராக ஸ்டன்னர் சாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE