ஆபாசப் பட தயாரிப்பில் என் கணவர் ஈடுபடவில்லை: போலீஸாரிடம் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

ஆபாசப் பட தயாரிப்பில் ராஜ் குந்த்ரா ஈடுபடவில்லை என அவரது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை கட்டாயப்படுத்தி ஆபாசப்படங்களில் நடிக்க வைத்து, பின்னர் அப்படங்களை செல்போன் செயலி மூலம் விநியோகம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, அவரது உதவியாளர் ரயான் தோப்ரே உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களின் போலீஸ் காவல் நாளை (ஜூலை 27) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப் பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா ஷெட்டி அளித்த வாக்குமூலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

“ஹாட்ஷாட் செயலி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அந்த செயலியில் இடம்பெற்றுள்ள தகவல், வீடியோ குறித்தும் எதுவும் தெரியாது. எனது கணவர் ராஜ் குந்த்ரா எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.

ஆபாச படத் தயாரிப்பில் எனக்கோ என் கணவருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை. லண்டன் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியும் ராஜ் குந்த்ராவின் மைத்துனரும் பிரதீப் பக்சிதான் அந்த செயலியை உருவாக்கி நடத்தி வந்தார்” என ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE