பயங்கர விபத்து: யாஷிகா ஆனந்த் படுகாயம்; தோழி சம்பவ இடத்திலேயே பலி

By செய்திப்பிரிவு

தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளார். அவரது தோழி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் யாஷிகா தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் யாஷிகாவும் அவருடைய தொழிகள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். அருகே இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE