'பிச்சைக்காரன் 2' மூலம் இயக்குநராகும் விஜய் ஆண்டனி

By செய்திப்பிரிவு

'பிச்சைக்காரன் 2' படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் விஜய் ஆண்டனி.

2016-ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்திருந்தார். சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் விஜய் ஆண்டனியுடன் நடித்திருந்தனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

கரோனா ஊரடங்கு சமயத்தில் 'பிச்சைக்காரன் 2' படத்தை அறிவித்தார் விஜய் ஆண்டனி. இதன் கதை, திரைக்கதையை விஜய் ஆண்டனியே எழுதியுள்ளார். இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது 'பாரம்' படத்துக்காக தேசிய விருது வென்ற ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. பின்பு அவர் மாற்றப்பட்டு 'கோடியில் ஒருவன்' இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கவுள்ளதாகச் செய்தி வெளியானது.

இன்று (ஜூலை 24) விஜய் ஆண்டனி பிறந்த நாளை முன்னிட்டு 'பிச்சைக்காரன் 2' படத்தின் இயக்குநர் யார் என்பது வெளியிடப்படும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி விஜய் ஆண்டனியே இயக்கி, நடிக்க 'பிச்சைக்காரன் 2' உருவாகிறது. இதற்கான அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து இயக்குநராகவும் உருவாகியுள்ளார் விஜய் ஆண்டனி. 2022-ம் ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத இந்தப் படத்தை இப்போதே 'BLOCKBUSTER 2022' என்று படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE