ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் ஆர்யா. 'அறிந்தும் அறியாமலும்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பின்பு 'நான் கடவுள்', 'மதராசப்பட்டினம்', 'பாஸ் (எ) பாஸ்கரன்', 'ராஜா ராணி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'சார்பட்டா பரம்பரை' படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆர்யாவின் நடிப்பு பாராட்டு தெரிவித்துள்ளனர். 'கஜினிகாந்த்' படத்தில் நடித்த போது ஆர்யா - சாயிஷா இருவரும் காதல் மலர்ந்தது. 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்குப் பிறகு சாயிஷா தொடர்ச்சியாக நடித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சாயிஷா கர்ப்பமானார் . இந்நிலையில் ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு நேற்று (ஜூலை 23) இரவு பெண் குழந்தை பிறந்தது. இதனை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரையுலக பிரபலங்களும் ஆர்யா - சாயிஷா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.