'சார்பட்டா பரம்பரை' வாய்ப்பை தவறவிட்ட சூர்யா, கார்த்தி

By செய்திப்பிரிவு

'சார்பட்டா பரம்பரை' படத்தில் நடிக்கவந்த வாய்ப்பை சூர்யா, கார்த்தி இருவருமே தவறவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும், சமூக வலைதளத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் குறிப்பிட்டுப் பாராட்டி வருகிறார்கள்.

உண்மையில் இந்தக் கதை ஆர்யாவுக்காக எழுதப்பட்டது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட வருடங்களாகவே 'சார்பட்டா பரம்பரை' என்ற கதையில் பா.இரஞ்சித் பணிபுரிந்து வருகிறார் என்று செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன.

'மெட்ராஸ்' படத்துக்கு முன்னதாக கார்த்தியிடம் 'சார்பட்டா பரம்பரை' படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் நடிக்க கார்த்தி தயாராக இல்லை என்றவுடன்தான் 'மெட்ராஸ்' படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

அதேபோல் 'கபாலி', 'காலா' ஆகிய படங்களுக்குப் பிறகு ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்கவிருந்தார் பா.இரஞ்சித். இதற்காக சூர்யாவிடம் சொன்ன கதையும் 'சார்பட்டா பரம்பரை' தான். அப்போது 'கபாலி', 'காலா' ஆகிய படங்களின் விமர்சனத்தால் சூர்யா தயாராக இல்லை.

இதற்குப் பிறகே ஆர்யாவிடம் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். பின்பு தனது உடலமைப்பை மாற்றி ஆர்யாவும் தயாராகி நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ளவர்களுடன் இயக்குநர் பா.இரஞ்சித்தும் இணைந்து குத்துச்சண்டைப் பயிற்சி எடுத்துள்ளார். அப்போதுதான் காட்சியமைப்புகள் சரியாக வரும் என்பதுதான் காரணமாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE