உங்கள் கருத்துகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்: ப்ரியா பிரகாஷ் வாரியர் காட்டம்

By செய்திப்பிரிவு

தனது காணொலிப் பதிவுகளைப் பற்றி எதுவும் தெரியாமல் கருத்துப் பகிர்பவர்கள் பற்றி நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

'ஒரு அதார் லவ்’ என்கிற மலையாளப் படத்தின் மானிக்க மலராயா பூவி' என்ற பாடல் மூல கவனம் ஈர்த்தவர் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர். இந்தப் பாடலில் இவர் கண்ணடிப்பது போன்ற காட்சி வைரலானதால் இவரை 'கண்ணடிக்கும் பெண்' என்றே ஆங்கிலத்தில் செல்லப் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

ஒரே பாடலின் மூலம் தேசிய அளவில் பிரபலமான ப்ரியா, தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமானார். தற்போது ’இஷ்க் நாட் எ லவ் ஸ்டோரி’ என்கிற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கரோனா ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ப்ரியாவும் அவரது நண்பர்கள் சிலரும் ரஷ்யாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்டக் காணொலிகளை ப்ரியாவின் நண்பர்கள் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதில் ப்ரியா இருக்கும் காணொலிகளை மட்டும் சிலர் தனியே எடுத்து, அவற்றுக்கு தவறான அர்த்தம் சேர்த்து பகிர்ந்து வருகின்றனர். இது குறித்து அறிந்த ப்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரீஸ் பிரிவில் பகிர்ந்திருப்பதாவது:

"என் நண்பர்களுடனான பயணத்தின் போது நாங்கள் எடுத்த காணொலிகள் சமூக வலைதளங்கள் முழுவதும், என்ன ஏது என்று சரியான பின்னணி இல்லாமலேயே பகிரப்பட்டு வருகின்றன. அனைவரது அக்கறைக்கும் நன்றி. ஆனால், எனது சம்மதமின்றி அவற்றை என் நண்பர்கள் அவர்களின் பக்கங்களில் பகிரவில்லை என்பதால் இதுபற்றிய விவாதம் தேவையற்றது.

ஆனால் அந்தக் காணொலிகளுக்கு முட்டாள்தனமான பெயர்கள் வைத்து, அவை எங்கே எப்படி எடுக்கப்பட்டது என்ற பின்னணி எதுவும் இல்லாமல் வாட்ஸப், யூடியூப், டிக் டாக் உள்ளிட்ட தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஊடகத்தினரே, உங்கள் பார்வையாளர்களுக்கு உண்மையான விஷயங்களை அடுத்த முறை தாருங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, என் நண்பர்களுடன் நான் என்ன செய்கிறேன், என் வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்பதெல்லாம் என் தனிப்பட்ட விருப்பம். எனவே, உங்கள் கருத்துகளை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்".

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE