தொடரும் உருவ கேலி, கவலையில்லை: வித்யுலேகா உற்சாகப் பதிவு

By செய்திப்பிரிவு

தன்னைத் தொடர்ந்து உருவ கேலி செய்பவர்கள் குறித்து தனக்குக் கவலையில்லை என்று நடிகை வித்யுலேகா ராமன் பதிவிட்டுள்ளார்.

'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமாகிய வித்யுலேகா, நடிகர் மோகன்ராமின் மகள். 'ஜில்லா', 'வீரம்', 'வேதாளம்', 'பவர் பாண்டி' உள்ளிட்ட பட படங்களில் வித்யுலேகா நடித்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக அதிகமாக தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கும் வித்யுலேகா, தான் உடல் எடை குறைத்தும், தனக்கு நேர்ந்த உருவ கேலி அனுபவங்கள் குறித்தும் ஏற்கெனவே பகிர்ந்துள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் இது குறித்துப் பகிர்ந்துள்ளார் வித்யுலேகா.

"20 கிலோ குறைத்திருக்கிறேன். ஆனால் இன்னமும் எனது புகைப்படங்களின் கீழ் எனது உடல் எடையை வைத்து பலரும் உருவ கேலி செய்து வருகின்றனர். என்னை பன்றி என்றும், நான் நடனம் ஆடும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது என்றும் பேசுகின்றனர். சில நாட்கள் நான் அளவுக்கதிகமாகவே எடை இழக்கிறேன்.

யாரையும் திருப்திபடுத்த முடியாது போல. ஆனால் விஷயம் தெரியுமா? நான் என்னைத் தவிர இங்கு வேறுயாரையும் திருப்திபடுத்துவதற்காக இல்லை. எனவே நன்றி. சென்று வாருங்கள்.

என்னைக் கிண்டல் செய்பவர்களே, இன்று 200 கலோரிக்களை எரித்திருக்கிறேன். உற்சாகமாக உணர்கிறேன். கீபோர்டுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, உங்களைப் பற்றிய நம்பிக்கை ஏதுமின்றி, பயத்தில் வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?" என்று வித்யுலேகா பகிர்ந்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE