இதனால்தான் பாலிவுட்டை சாக்கடை என்றேன்: ராஜ் குந்த்ரா வழக்கு குறித்து கங்கணா சாடல்

By செய்திப்பிரிவு

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் மீதான தனது கடுமையான விமர்சனத்தை நடிகை கங்கணா முன்வைத்துள்ளார்.

கடந்த வருடம் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பாலிவுட்டை மிகக் கடுமையாகச் சாடி வருகிறார் நடிகை கங்கணா ரணாவத். பாலிவுட் ஒரு சாக்கடை, இங்கு வாரிசு அரசியல் அதிகம், மாஃபியா கூட்டங்கள் நிறைந்த கூடாரம் இது என்கிற ரீதியில் திரைத்துறையைத் தாக்கி வரும் கங்கணா, சக கலைஞர்கள் சிலரின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் ஆபாசப் படம் தயாரித்து அவற்றை 'ஹாட்ஷாட்ஸ்' என்ற செல்போன் செயலியின் மூலம் பிரபலப்படுத்தி சம்பாதித்த வழக்கில் தொழிலதிபரும் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். அவருடைய உதவியாளர் ரயான் தோர்பேவும் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் கங்கணா, "இதனால்தான் பாலிவுட் திரைத்துறையை நான் சாக்கடை என்கிறேன். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனது அடுத்த தயாரிப்பான 'டிகு வெட்ஸ் ஷெரூ'வில், இந்த பாலிவுட்டின் மோசமான முகத்தை நான் வெளிச்சம் போட்டுக் காட்டவிருக்கிறேன். அறநெறிகள் இருக்கும் கண்டிப்பான அமைப்பும், படைப்பாற்றல் துறையில் மனசாட்சியும் இருக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு சாட்டையும் வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 23ஆம் தேதி வரை போலீஸ் காவலில்ராஜ் குந்த்ரா இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE