அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள 'டைரி' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானவுடன், வெளியீட்டுத் தேதியைப் படக்குழு முடிவு செய்யவுள்ளது.
'டைரி' படத்துக்குப் பிறகு அருள்நிதி, புதுமுக இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வந்தார். இதனை விஜய் பாண்டி மற்றும் பி.ஜி.முத்தையா ஆகியோர் தயாரித்து வந்தார்கள். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் இருப்பதாகத் தெரிகிறது.
இன்று (ஜூலை 21) அருள்நிதி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அருள்நிதி - அரவிந்த் இருவரும் இணைந்துள்ள படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'தேஜாவு' என இந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.
மிஸ்ட்ரி த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் அருள்நிதியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக பி.ஜி.முத்தையா, இசையமைப்பாளராக ஜிப்ரான், எடிட்டராக அருள் சித்தார்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, தமன் ஆகியோர் இணைந்து 'தேஜாவு' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகியுள்ளது. தெலுங்கில் அருள்நிதி கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.