மூன்று முறை தேசிய விருது பெற்ற நடிகை சுரேகா சிக்ரி காலமானார்

By செய்திப்பிரிவு

மூன்று முறை தேசிய விருது பெற்ற பிரபல இந்தி நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75.

1978ஆம் ஆண்டு நடிப்புத் துறையில் அறிமுகமான சுரேகா சிக்ரி புகழ்பெற்ற பல திரைப்படங்கள், நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். 'பதா ஹூ', 'தமாஸ்', 'மாமோ' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்தார். தனது நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றார்.

இந்தியில் பிரபல சீரியலான 'பலிக வது'வில் சுரேகா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஒளிபரப்பான இத்தொடர் 2016ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

கடந்த மூன்று வருடங்களில் இரண்டு முறை சுரேகா மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் தனது 75-வது வயதில் மாரடைப்பு காரணமாக மும்பையில் உயிரிழந்தார்.

சுரேகா மரணத்துக்கு மனோஜ் பாஜ்பாய், பூஜா பட், அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE