'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெளியீட்டுத் தேதியில் படக்குழுவினர் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.
இன்னும் 2 பாடல்கள் மட்டுமே படமாக்க வேண்டியதுள்ளன. இதர காட்சிகள் அனைத்தும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டபோது, 'ஆர்.ஆர்.ஆர்' வெளியீட்டில் மாற்றம் இருக்கும் எனத் தகவல் வெளியானது.
ஆனால், 'ஆர்.ஆர்.ஆர்' படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் ராஜமெளலி உருவாக்கியுள்ள பிரம்மாண்டம், சண்டைக் காட்சிகளில் பலரின் உழைப்பு என அனைத்துமே தெளிவாகியுள்ளது. இதில் அக்டோபர் 13-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இதே வெளியீட்டுத் தேதியைத்தான் முடிவு செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாகவுள்ளது. இதன் தமிழக வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.