மத நம்பிக்கையை அவமதிப்பதாக புகார்: கரீனா கபூர் புத்தகத்துக்கு எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

கரீனா கபூர் எழுதியுள்ள புத்தகத்தின் தலைப்பு மத நம்பிக்கையை அவமதிப்பதாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி சைஃப் அலி கான் - கரீனா கபூர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி அன்று சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 9 அன்று கரீனா கபூர் தனது பிரசவ காலம், குழந்தைப் பேறு அனுபவங்கள் குறித்து தான் எழுதிய புத்தகத்தை இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்தார். இந்தப் புத்தகம் தனது மூன்றாவது குழந்தையைப் போன்றது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அந்தப் புத்தகத்துக்கு ‘ப்ரெக்னென்சி பைபிள்’ என்றும் தலைப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் கரீனா கபூர் எழுதிய புத்தகத்தின் தலைப்பு தங்களின் மத நம்பிக்கையை அவமதிப்பதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதேபோல அனைத்திந்திய சிறுபான்மையினர் வாரியமும் கரீனா கபூரின் புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE