தாத்தாவாகும் வயதில் மூன்றாவது மனைவியா?- ஆமிர் கானைச் சாடிய பாஜக எம்.பி.யால் சர்ச்சை

By செய்திப்பிரிவு

நடிகர் ஆமிர் கான் குறித்து மத்தியப் பிரதேச பாஜக எம்.பி. சுதிர் குப்தா சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர் கான். தற்போது 'தி ஃபாரஸ்ட் கம்ப்' இந்தி ரீமேக்கில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது 2-வது மனைவி கிரண் ராவ் உடன் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு ஆமிர் கான் - கிரண் ராவ் இருவரும் தங்களுடைய 15 வருடத் திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக இருவரும் கூட்டாக அறிவித்தனர். ஆமிர் கான் - கிரண் ராவ் இணைக்கு அசாத் ராவ் கான் என்ற மகன் இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ஆமிர் கானின் இந்த திடீர் முடிவுக்கு ‘தங்கல்’ படத்தில் ஆமிர் கானின் மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக் தான் காரணம் என பாலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. இத்தகவல்கள் குறித்து ஆமிர் கான் தரப்பிலிருந்தோ, பாத்திமா சனா ஷேக் தரப்பிலிருந்தோ இதுவரை மறுப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. சுதிர் குப்தா ஆமிர் கான் குறித்த சர்ச்சையான கருத்தைத் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''ஆமிர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவை இரண்டு குழந்தைகளுடன் கைவிட்டார். அதன் பிறகு தற்போது கிரண் ராவை ஒரு குழந்தையுடன் கைவிட்டுள்ளார். தாத்தாவாகும் வயதில் அவர் இப்போது மூன்றாவது மனைவியைத் தேடிக் கொண்டிருக்கிறார்'' என்று விமர்சித்தார்.

பாஜக எம்.பி.யின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ஆமிர் கான் ரசிகர்கள் இதற்கு எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE