தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ரஜினி நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் உருவாகும் 'அண்ணாத்த' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார்.
'அண்ணாத்த' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலை 14-ம் தேதி முதல் மேற்கு வங்கத்தில் தொடங்குகிறது. இதில் ரஜினியின் காட்சிகள் 4 நாட்கள் படமாக்கப்படவுள்ளன. இதற்காக நாளை (ஜூலை 13) மேற்கு வங்கத்துக்குப் பயணிக்கவுள்ளார் ரஜினி.
இந்தப் படத்துக்குப் பிறகு ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை யார் இயக்கவுள்ளார் என்பது பெரும் கேள்வியாக இருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்குவார் என்று செய்திகள் பரவின. தற்போது ரஜினி நடிப்பில் உருவாகும் 169-வது படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
» ஏஜெண்ட் படப்பிடிப்பு தொடக்கம்: வைரலாகும் அகிலின் தோற்றம்
» வசூல் சாதனை படைத்த 'ப்ளாக் விடோ': ஓடிடி தளத்திலும் சிறப்பான வரவேற்பு
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கியவர் தேசிங் பெரியசாமி. அந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தேசிங் பெரியசாமியை அழைத்துப் பாராட்டினார் ரஜினி. அப்படி உருவான சந்திப்பின் மூலம் கதை ஒன்றைக் கூறவே, ரஜினி ஒப்புதல் தெரிவித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகர் தேசிங் பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி - தேசிங் பெரியசாமி இணையும் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழ்த் திரையுலகில் முன்னணித் தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் ஏஜிஎஸ் தயாரிக்கும் முதல் ரஜினி படமாக இது அமையவுள்ளது.
'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாரானவுடன், ரஜினியின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.