சுனில் ஷெட்டி வீடு இருக்கும் கட்டிடத்தை சீல் வைத்த மும்பை மாநகராட்சி

By ஐஏஎன்எஸ்

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் வீடு இருக்கும் கட்டிடத்துக்கு மும்பை மாநகராட்சியினர் சீல் வைத்துள்ளனர். ஆடம்பரக் குடியிருப்புகள் இருக்கும் இந்தக் கட்டிடத்தில் கரோனா தொற்று இருப்பவர்கள் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ப்ரித்வி அபார்ட்மென்ட்ஸ் என்ற இந்தக் குடியிருப்பில் 30 மாடிகளில் 120 வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக இந்தக் குடியிருப்பில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துள்ளனர். எனவே, இதில் சில தளங்களை மாநகராட்சி சீல் வைத்தது.

மும்பை மாநகராட்சியின் கோவிட்-19 தடுப்பு விதிகளின்படி, ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தால் ஐந்துக்கும் அதிகமான நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் தொற்றைக் கட்டுப்படுத்த அந்தக் கட்டிடம் சீல் வைக்கப்பட வேண்டும். இந்தக் கட்டிடத்தில்தான் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

ஆனால், தற்போது அவர் குடும்பத்தோடு வெளியூரில் இருப்பதால் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படவில்லை. ஆனால், தனது வீட்டுக் கட்டிடம் சீல் வைக்கப்பட்டிருப்பது குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் சுனில் ஷெட்டி, "வெளியே வர முடியாதா அல்லது உள்ளே நுழைய முடியாதா? சொல்லுங்கள், சொல்லுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தக் கட்டிடம் உட்பட இன்னும் 9 ஆடம்பரக் குடியிருப்புக் கட்டிடங்களுக்குத் தெற்கு மும்பை பகுதியில் மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கரோனா இரண்டாவது அலையில், கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் குடிசைப் பகுதிகளோடு ஒப்பிடும்போது, பெரும்பான்மையான தொற்றுகள், இப்படியான குடியிருப்புகள், உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்களில்தான் அதிகம் ஏற்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE