முதன்முதலாக அஜித்தைச் சந்தித்த தருணம்: விஜயலட்சுமி பகிர்வு

முதன்முதலாக அஜித்தைச் சந்தித்த தருணத்தை வீடியோவாக பேசி வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.

அகத்தியன் இயக்கத்தில் அஜித், தேவயானி, ஹீரா, மணிவண்ணன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'காதல் கோட்டை'. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் (ஜூலை 12) 25 ஆண்டுகள் ஆகிறது. இதனைப் படக்குழுவினர் கொண்டாடி வருகிறார்கள்.

இயக்குநர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமியிடம் பலரும், 'காதல் கோட்டை' படப்பிடிப்புக்குச் சென்றிருக்கிறீர்களா, அஜித்திடம் பேசியிருக்கிறீர்களா என்று பலரும் கேட்டுள்ளனர். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் தளத்தில் இரண்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் விஜயலட்சுமி பேசியிருப்பதாவது:

"'காதல் கோட்டை' படப்பிடிப்பின் போது நீங்கள் போயிருக்கிறீர்களா, அஜித் சாரிடம் பேசியிருக்கிறீர்களா என்று கேட்பார்கள். முதன்முதலாக நான் அக்கா, தங்கச்சி எல்லாம் அஜித் சாரை வான்மதி படப்பிடிப்பில் தான் பார்த்தோம். அப்பாவின் முதல் படம் வான்மதி தான். அந்தப் படப்பிடிப்பில் அஜித் சாருடன் ஜாலியாக பேசிக் கொண்டே இருந்தோம். நண்பர் மாதிரி ஜாலியாக பேசினார். அப்போது ஒரு சண்டைக் காட்சிக்கு டூப் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். டூப் எல்லாம் வேண்டாம், நான் தான் பண்ணுவேன் என்று நடித்துக் கொடுத்தார். அதற்குப் பின்பு அவரை காணவில்லை.

அந்தச் சமயத்தில் 'ஆசை' படம் வெளியான சமயம் வேறு என்பதால் அவர் மீதான அன்பு அதிகம். ஒரு லைட்மேன் மடியில் தலை வைத்து தரையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது. சும்மாவே நாங்கள் ரசிகைகள். அந்தக் காட்சியைப் பார்த்ததிலிருந்து பெரிய ரசிகைகளாக மாறிவிட்டோம். இது தான் நாங்கள் அஜித் சாரை முதன் முதலாக சந்தித்த தருணம்"

இவ்வாறு விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE