தனுஷ் படத்திலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று வெளியான தகவலுக்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
'தி க்ரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியா திரும்பியுள்ளார் தனுஷ். தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'டி 43' படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று தகவல் வெளியானது. மேலும், தனுஷே தற்போது இயக்கி வருவதாகவும், அவருக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவா இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்தபோது, "தனுஷ் - கார்த்திக் நரேன் இருவருக்குமே எந்தவொரு பிரச்சினையும் இல்லை. கார்த்திக் நரேன்தான் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்" என்று தெரிவித்தார்கள். தன் மூலம் தனுஷ் - கார்த்திக் நரேன் இருவருக்கும் கருத்து வேறுபாடு என்ற செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.