மூளையில் ஏற்பட்ட பிரச்சினை: தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு அறுவை சிகிச்சை

By செய்திப்பிரிவு

பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவுக்கு மூளையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.

தமிழில் முன்னணித் தொகுப்பாளினியாக இருப்பவர் அர்ச்சனா. சன் டிவியில் ‘இளமை புதுமை’, ‘காமெடி டைம்’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நான்காவது சீசனில் கலந்துகொண்டார். தற்போது விஜய் டிவியில் சில முக்கிய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 10) காலை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளதாவது:

''எப்போதும் இதயத்திலிருந்து இயங்கும் ஒரு பெண் நான். அதனால் என் மூளை கோபமடைந்து என் இதயத்தை விட அது வலிமையானது என்று எனக்குக் காட்ட விரும்பியுள்ளது. தற்போது அது ஒரு சிறிய பிரச்சினையைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. அது என் மண்டை ஓட்டை லேசாகக் குத்திவிட்டது. அதில் இருக்கும் ஒரு சிறு துளையை நான் அடைக்க வேண்டியுள்ளது.

இன்று எனக்கு ‘செரிப்ரோஸ்பைனல் திரவக் கசிவு’க்கான அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. மண்டை ஓட்டில் மூளைக்கு அருகில் சில விநோத வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வீடு திரும்புவேன். இந்தக் கட்டத்தையும் எதிர்த்துப் போராடி மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாவும் வீடு திரும்புவேன்''.

இவ்வாறு அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE