இவ்வளவு வருடங்கள் நீடித்திருப்பது அதிர்ஷ்டமே: மணிரத்னம்

திரைத்துறையில் இவ்வளவு வருடங்கள் தொடர்ந்து நீடித்திருப்பது தனது அதிர்ஷ்டமே என்று இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார்.

கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்துடன், மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் சேர்ந்து 'நவரசா' என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தை எடுத்துள்ளனர். நவரசம் எனப்படுகிற ஒன்பது உணர்ச்சிகளின் அடிப்படையில் ஒன்பது குறும்படங்களின் தொகுப்பாக 'நவரசா' உருவாகியுள்ளது.

கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், வஸந்த் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். சூர்யா, அரவிந்த்சாமி, சித்தார்த், பார்வதி, பிரசன்னா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதில் பணியாற்றிய அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்து வருகிறார்கள். ஆகஸ்ட் 6ஆம் தேதி 'நவரசா' ஆந்தாலஜி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்து வருகிறார்.

1983ஆம் ஆண்டு 'பல்லவி அனுபல்லவி' என்கிற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மணிரத்னம் 30 வருடங்களுக்கும் மேலாகத் திரைத்துறையில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் மணிரத்னம், "இவ்வளவு வருஷங்கள் நீடித்திருப்பது என் அதிர்ஷ்டம்தான் (சிரிக்கிறார்). இப்படிப் பல ஆசான்கள் இருந்திருக்கிறார்கள். குரசோவா அவர் கடைசி நாட்கள்வரை படம் இயக்கினார். க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இன்று வரை சிறந்த படங்களை இயக்கி வருகிறார்.

இந்தியாவில் யாஷ் சோப்ரா உள்ளிட்ட பலர் இருந்தனர். அது, இயக்குநராக இருக்க வேண்டும் என்கிற நமது விருப்பத்தைப் பொறுத்துதான். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும் என்கிற தாகம் இருந்தால், அதற்கான வழியை நீங்கள் கண்டறிவீர்கள்" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE