மலேசியாவைச் சேர்ந்த அரவிந்த் ராஜ் என்கிற பாடகரின் பாடலைப் பாராட்டி நடிகர் சிலம்பரன் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலேசிய பாடகர் அரவிந்த் ராஜ், ’சுல்தான்’ திரைப்படத்தில் சிலம்பரசன் பாடியிருந்த ’’யாரையும் இவளோ அழகா’’ பாடலைப் பாடியிருந்தார். இந்தக் காணொலியின் முடிவில், அரவிந்த் ராஜின் அம்மா, இந்தப் பாடல் சிம்புவைச் சென்று சேர வேண்டும், அதற்கு ரசிகர்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கைகேற்ப இந்தப் பாடலை சிலம்பரசன் பாராட்டியுள்ளார். "சூழல், சந்தர்ப்பங்களைத் தாண்டி ஒரு தாயின் அன்பு இருக்கும். அவரது விருப்பம் நிறைவேறியிருக்கிறது. பாடலும், காணொலியும் எனக்குப் பிடித்திருந்தது. அத்தனை அன்புக்கும் நன்றி" என்று இந்தக் காணொலியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து சிம்பு கருத்துப் பதிவிட்டுள்ளார்.
அவரது பாராட்டுக்கு பதிலளித்திருக்கும் அரவிந்த் ராஜ், "அண்ணா, இந்தக் காணொலியை கவனித்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. நான் என்றுமே உங்களின் பெரிய ரசிகன். இனியும் அப்படித்தான். உங்கள் பாராட்டு எனக்கு இந்த உலகத்தின் அளவு முக்கியத்துவம் வாய்ந்தது. பணத்தால் இந்த உணர்வை வாங்க முடியாது. என் தலைவரை டேக் செய்த ஒவ்வொருவருக்கும், நன்றி. அம்மா மிகவும் சந்தோஷப்படுவார். ஒரு முறை சிம்பு ரசிகனாக இருந்தால் என்றுமே சிம்பு ரசிகன் தான்" என்று பதிவிட்டுள்ளார். சிம்புவின் கருத்தையும் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துப் பகிர்ந்துள்ளார்.